புதன், 23 ஜூலை, 2008

7.எண்ணெழுத்திகழேல்

எண் என்பது கணித நூல்,எழுத்தென்பது இலக்கண நூல்.இந்த இரண்டையும் மறவாமல்(இகழாமல்)கற்க வேண்டும்.

இவ‌ற்றை பயனற்றவை என்று எண்ணி அல‌ட்சியப்ப‌டுத்தக்கூடாது.

இவைகளை க‌ற்று அறிந்த‌வ‌ர்க‌ளுக்கே ஞான‌ நூல்க‌ள் தெளிவாக புரிப‌டும்,ஒருவருக்கு கணிதமும்,இலக்கணமும் இரு கண்கள் போல மிக முக்கியமானவை.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்'என்ப‌தும் இத‌னால்தான்.

அவந்தி தேச‌த்தில் இராஜ‌வேல் என்ற‌ அர‌சனுக்கு மிக‌வும் அழ‌கான ஆனால் சிறிதும் எழுத்தறிவில்லாத ம‌க‌ன் ஒருவன் இருந்தான் அவ‌னுக்கு எப்பாடு பட்டாகிலும் ப‌டிப்ப‌றிவை புக‌ட்டிவிட‌லாம் என்று அரசன் எவ்வ‌ள‌வோ முய‌ற்சிக‌ள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்க வில்லை.இத‌னால் கோப‌ம‌டைந்த‌ ம‌ன்னன்,இவன் இந்த நாட்டை ஆளுவதற்கு ஏற்ற‌வ‌ன் இல்லை என்று த‌ன் நாட்டை விட்டே அனுப்பி விட்டான்.அர‌ச‌குமாரனும் த‌ன‌து சொந்த நாட்டை விட்டு தென்னாட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்தான்.

ஒரு நாள் சோழ‌ராஜ‌ன் த‌லைந‌க‌ர‌மான காவிரிப்பூம் ப‌ட்ட‌ண‌த்திற்குள் நுழைந்து அங்கு ராஜ‌வீதியில் போய்க் கொண்டிருந்தான்.அப்பொழுது அர‌ண்ம‌னையின் மேல் மாட‌த்தில் நின்று கொண்டிருந்த‌ சோழ‌ ம‌ன்ன‌னின் ம‌க‌ள் அர‌ச‌குமார‌னின் அழ‌கில் மயங்கி அவனை சந்திக்க எண்ணி அன்று மாலை நகர்புறத்தில் உள்ள ஒரு வசந்த மண்டபத் திற்கு வரவேண்டும் என்ற தன் எண்ண‌த்தை ஒரு ஓலையில் எழுதி அதை அவனிடம் எறிந்தாள்.

எழுத‌றிவில்லாத‌ அர‌ச‌குமாரனோ அந்த‌ ஓலையில் என்ன‌ எழுதி இருக்கிற‌து என்று அறியாதவனாய் அதை தெரிந்து கொள்ள‌ விரும்பி யாரிட‌ம் கேட்ப‌து என்று யோசித்து ஊருக்கு வெளியில் உள்ள ஒரு ம‌ண்ட‌ப‌த்தில் இருந்த‌ ஒருவ‌னிட‌ம் அதை காட்டினான், அவ‌னோ மிக‌வும் கெட்ட‌வ‌ன், ஓலையில் எழுதியிருந்த‌தை ப‌டித்ததும் எப்படியாகிலும் அர‌ச‌குமார‌னை ஏமாற்றி விட்டு அர‌ச‌குமாரியை தான் அடைய விரும்பி அவ‌னிட‌ம் 'இனி நீ இங்கிருந்தால் உன் த‌லை போய்விடும் என்று எழுதி இருக்கிற‌து' என்றான்,அதை உண்மை என்று நம்பி ப‌யந்து போய் முட்டாள் அரசகுமாரன் சிறிதும் யோசியாமல் அந்த‌ ஊரை விட்டே போய் விட்டான்.

அன்றிர‌வு ராஜ‌குமாரி இவ‌ன் வ‌ர‌வை எதிர்பார்த்து வ‌சந்த‌ ம‌ண்ட‌ப‌த் திற்கு வ‌ர‌.. அங்கு தான் விரும்பிய அர‌ச‌குமார‌ன் அல்லாத‌ வேறொ ருவ‌ன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று உண‌ர்ந்த‌தும் வெட்க‌த் தினாலும்,துக்க‌த்தினாலும்,மிக‌வும் வருந்தி அப்பொழுதே த‌ன் உயிரை போக்கிக் கொண்டாள்.

பிறகு அங்கு நடந்த இந்த‌ விப‌ர‌ங்கள் யாவற்றையும் அறிந்த‌ அர‌ச‌ குமார‌ன் தான் செய்த‌ தவறினாலும்,தனக்காகவும்தானே ராஜ‌குமாரி உயிரை விட்டு விட்டாள் இனி நாம் உயிரோடு இருப்பதற்கு தகுதி இல்லை என்று நினைத்து வருந்தி அவ‌னும் த‌ன் உயிரை போக்கிக் கொண்டான்.க‌ல்விய‌றிவு இல்லாத‌ கார‌ண‌த்தால் இப்படியாக அவன் தன் வாழ்க்கையில் ப‌ல‌ இன்ன‌ல்களை எதிர்கொள்ள வேண்டிய‌தாகி விட்ட‌து.

எண்ணெழுத்திக‌ழேல் என்ப‌தில் 'எண் எழுத்து'என்ப‌த‌ற்கு எட்டெழுத்து என்றும்,யாவ‌ராலும் எண்ணுத‌ற்குரிய‌ எழுத்து என்றும் பொருள் கூறி க‌ட‌வுளின் திருநாம‌மாகிய‌ அஷ்டாக்ஷ்ர‌த்தை இகழாதே என்றும் சொல்வார்கள்.

6.ஊக்கமது கைவிடேல்

ஒரு தொழிலோ அல்லது வேறு என்ன காரியமாக இருந்தாலும் அதை செய்கின்ற காலத்தில் எதிர்பாரா இடையூறுகள் எது வந்தாலும் எக்காரணம் கொண்டும் நடுவில் நிறுத்தி விடாமல் அதில் முழுக்கவனம் செலுத்தி எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும்.

ஸ்காட்லாண்டில் நாட்டில் ராபர்ட் புரூஸ் என்ற அரசன் தன்னுடைய எதிரிகளோடு பல தடவை போர் புரிந்து தோல்வியடைந்து கடைசியில் உற்சாகம் குறைந்து இனி தன் முயற்சியால் ஒன்றும் பயனில்லை என்று கருதி அங்கிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும்படியான நிலையில் அவன் மட்டும் தனியாக ஒரு குடிசையில் வாழ நேரிட்டது.தான் அடைந்த இந்த இழிந்த நிலையைக் குறித்து தினமும் வருந்திக் கொண்டிருந்தான்.

ஒருநாள் புரூஸ் தனது குடிசையில் மல்லாந்து படுத்தபடி இனி என்ன செய்வது என்று கவலையோடு யோசித்துக் கொண்டிருக்கையில்,மேலே உத்தரத்தில் சிலந்தி ஒன்று ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு தன் வலையை கட்ட எண்ணி அது இருந்த உத்தரத்தில் தன்மெல்லிய நூலை கட்டி விட்டு மற்றொரு உத்தரத்திற்கு பாய்ந்து கொண்டு இருந்தது,இரண்டு உத்தரத்திற்கும் இடைவெளி அதிகம் இருந்ததால் அதை எட்ட முடியாமல் சிலந்தி கீழே விழுந்து விட்டது.ஆனாலும் அதற்காக பின்வாங்காத சிலந்தி மீண்டும் மேலே ஏறி முன் போலவே அடுத்த உத்தரத்திற்கு பாய்ந்தது!இந்த முறையும் கீழே விழுந்து விட்டது,இப்படியே திரும்ப திரும்ப ஆறு தடவை முயன்றும் சிலந்தி தன் முயற்சி பலன் அளிக்காமல் கீழே விழுந்து விட்டது.கீழே விழுந்ததில் மிகவும் களைப்படைந்து போன சிலந்தி அப்படியே அசையாமல் கீழே கிடந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த புரூஸ் இந்த சிலந்தியும் நாமும் ஒரே நிலையில் இருக்கிறோம்,நாம் பல தடவை போர் புரிந்து தோற்று களைத்தோம், இந்த சிலந்தியும் தனது முயற்சியில் பல தடவை தோற்று களைப்படைந்து விட்டது, இனி இதற்கும் வழியில்லை,அதே போல் நமக்கும் வேறு வழி காணோம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சிலந்தியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அசையாமல் கிடந்த சிலந்தி மெதுவாக அசைந்தது,பிறகு மெதுவாக அங்கிருந்து நகன்று முன்போல மேலே ஏறத்தொடங்கியது! புரூஸ் கண்கொட்டாமல் அதையே அதிசயத்தோடு பார்த்து கொண்டிருக்கும்போது,மேலே வந்த சிலந்தி தன் முழு பலத்தோடு ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு பாய்ந்தது, இந்த முறை தன் விடாமுயற்சியால் அது நினைத்தபடி மறு உத்தரத்தை அடைந்தது.

இவையெல்லாவற்றையும் பார்த்த புரூஸ் இது நமக்கு கடவுள் காட்டிய நல்வழியாக நினைத்து நாமும் முயல்வோம் என்று இ துவரை தான் பட்ட கவலையை விட்டு பல சிரமங்களுக்கு இடையில் சிதறுண்டு போன தன் படையைத் திரட்டி மிகவும் ஊக்கமுடன் மீண்டும் தன் எதிரியுடன் போர் செய்தான்.
இந்த முறை தன் விடா முயற்சியால் எதிரியை முறியடித்து அதில் வெற்றியும் அடைந்தான்.

'ஊக்கமது கை விடேல் 'என்னும் நீதியை அந்த சின்னஞ்சிறு சிலந்தியின் செய்கையை அறிந்த ராபர்ட் புரூஸ் தானும் அதே போன்று நடந்ததால் மீண்டும் உற்சாகத்துடன் மகிழ்ச்சி யாகவும் வாழ்ந்தான்.

5. உடையது விளம்பேல்

கோட் செய்யப்பட்ட வாக்கியத்தை மறை

அருமையாக தன்னிடத்தில் உள்ள ஏதாவது ஒன்றை வெளியில் சொல்லக்கூடாது.

சொன்னால் சில வேளை எதிரிகள் அதை பறித்து கெடுதலை உண்டாக்குவார்கள்.அதோடு அருமையான அந்த பொருளின் தன்மையும் குறைந்து விடும்.

ராமர் தன் மனைவி சீதையோடு வனத்தில் வசித்து வந்த காலத்தில் ராமர் இல்லாத சமயம் பார்த்து தந்திரமாக இராவணன் சீதையை தூக்கி சென்ற கதை நாம் யாவரும் அறிந்ததே.

அப்படி தூக்கிச் செல்லப்படும் பொழுது துக்கம் தாளாமல் சீதை ஓவென்று வாய்விட்டு கதறி அழுதாள்.சீதையின் அழுகுரலைக்கேட்ட ஜடாயு என்னும் கழுகரசன் அதி வேகமாக பறந்து வந்து ராவணனை எதிர்த்து போரிட்டான்.

ரொம்ப நேரம் அவர்கள் இருவரும் வெற்றி தோல்வி இல்லாமல் சண்டையிட்டார்கள். ராவணன் ஜடாயுவை வஞ்சனையாக கொல்ல நினைத்து ஜடாயுவிடம்"உன் உயிர்நிலை எங்கே இருக்கிறது?"என்று கேட்டான்.

ஜடாயு சத்தியவான் ஆதலால் பொய்சொல்லக் கூடாது என்று ராவணன் கேட்டதும் தன் உயிர் நிலை தன்னுடைய இறகில் இருப்பதாக உண்மையை சொன்னான் .

பிறகு ராவணனுடைய உயிர் நிலை எங்கே இருக்கிறது எனக்கேட்ட ஜடாயுவிடம் ராவணன் தன் உயிர் நிலை தன் கால் கட்டை விரலில் இருக்கிறது என்று பொய்யை சொன்னான்.

உடனே ஜடாயு ராவணனின் கால் கட்டை விரலை வெட்டினான் அதே சமயத்தில் ராவணன் ஜடாயுவின் இறகுகளை வெட்டி எறிந்தான். தன் உயிர் நிலை வெட்டப்பட்டதால் ஜடாயு துடி துடித்து கீழே விழுந்து மாண்டான்.ராவணனோ ஒரு தீங்கும் இல்லாமல் வெற்றி பெற்று சீதையை தூக்கிச்சென்று விட்டான்.

தன் அருமையான உயிர் நிலையை எதிரியான ராவணனிடம் கூறிய தோஷத்தால் நல்லவன் ஜடாயு தன் உயிரை இழக்கும்படி நேர்ந்தது.

இந்த காரணங்களால்த்தான் நமது பெரியோர்கள் அருமையான மந்திரங்களை எல்லாம் பெறத்தக்கவர் களுக்கு மட்டும் ரகசியமாக உபதேசிக்கிறார்களே தவிர வெளிப்படையாக சொல்லுவதில்லை

செவ்வாய், 22 ஜூலை, 2008

4. ஈவது விலக்கேல்

ஒருவர் பொருளோ பணமோ எதுவாக இருந்தாலும் பிறருக்கு கொடுக்கின்ற காலத்தில் அதை நடுவில் நின்று தடுக்காதே என்பது இதன் பொருள்.

ஒருவருக்கு அவர் விரும்பின பொருளை மற்றொருவர் மனமொப்பி கொடுக்கின்ற காலத்தில் வேறொருவர் குறுக்கிட்டுத் த‌டுத்தால் அப்படி செய்தவர் இரண்டு பாவங்களை செய்தவராகிறார்.

தருமம் செய்தவருக்கு வரவேண்டிய புண்ணியத்தை வரவொட்டாமல் தடுப்பது முதல் பாவம்,இரண்டாவது பாவம் ஒருவர் விரும்பின பொருளை அடையப் போகும் காலத்தில் அவருக்கு அது கிடைக்கவிடாமல் தடுத்தது.

இப்படி தடுப்பவர் செய்த பாவம் அவரைச் சேர்வதோடு அவரது சுற்றத்தாருக்கும் அது சேரும்.கொடுப்பதை தடுக்கும் கொடியவரோடு அவரின் உறவுகளும் உண்ண உணவில்லாமல் உடுக்க உடையில்லாமல் தவிப்பார்கள் என்றும்,அந்த பாவத்தால் உண்டாகும் தீமைகள் பற்றியும் அக்காலத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

மகாபலி என்ற சக்ரவர்த்தி சுவர்க்கம்,மத்தியம்,பாதாளம் எனமூன்று உலகங்களை ஆண்டு வந்தான்.இவனால் துரத்தப்பட்ட தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகாபலியால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைச் சொல்லி அவற்றை நீக்க முறையிட்டுக் கொண்டார்கள்.தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி விஷ்ணுவும் ஒரு குட்டை பிரம்மச்சாரியாய் உருவமெடுத்து வாமனன் என்ற பெயருடன் சக்ரவர்த்தி மகாபலியிடம் வந்து தாம் அமர்ந்து ஜபம்செய்ய தமது காலடியால் மூன்றடி மண் யாசகம் கேட்டார்.

அப்பொழுது மகாபலியின் குருவாகிய சுக்கிராச்சாரியார் சக்ரவர்த்தியிடம்"அரசே உங்களிடம் யாசிக்கின்ற இவரை சாமன்யராக நினையாதீர் கெட்டவர்களை க‌ண்டித்து நல்லவர்களைக் காக்கும் கடவுளே உங்களை ஏமாற்ற வந்திருக்கிறார் அவர் கேட்டபடி தானம் செய்யாதீர்கள்"என்று தடுத்தார்.மகாபலியோ"எனக்கு எப்படிப்பட்ட தீங்கு நேரிட்டாலும் அவர் கேட்டதைத் தருவேன்"என்ற மன உறுதியோடு வாமனர் கேட்டபடி மூவடி மண் தானம் செய்ய தீர்மானித்தான்.

அப்பொழுது வாமனரும் தன் கையில் இருந்த கெண்டியை மகாபலி கையில் கொடுத்து தமக்கு மூவடி மண் தானம் செய்ய வேண்டினார்.மகாபலியும் கெண்டியில் உள்ள‌ நீரை வாமனர் கையில் வார்த்து தானம் செய்ய தொடங்குகையில் சுக்கிராச்சாரியார் மிகச்சிறிய உருவெடுத்து கெண்டியின் மூக்கில் நுழைந்து நீரை வரவிடாமல் தடுத்தார்,இதையறிந்த வாமனர் தன்னிடமுள்ள‌ தருப்பை ஒன்றால் கெண்டியின் மூக்கினுள் குத்தி மகாபலி செய்யும் தானத்தை தடுத்ததால் அவர் உணவும் உடையும் இன்றி கஷ்டப்படவேண்டும் என்று சாபமும் கொடுத்தார்.இதனால் கண்ணில் காயமடைந்து மிகுந்த வருத்தத்துடன் சுக்கிராச்சாரியார் விலகி நிற்க மகாபலியும் வாமனருக்கு மூன்றடி மண் தானம் செய்தார்.

அதுபோது வாமனர் திரிவிக்கிரமராய் பெரிய உருவெடுத்து ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் மற்றோரடியால் மாகாபலியை பாதாளத்தில் அழுத்திவிட்டார்.
தானம் கொடுப்பதை தடுத்த சுக்கிராச்சாரியார் கண்ணிழந்த நிலையில் உணவும் உடையும் இன்றி வருந்தி கஷ்டப்பட்டார்.