திங்கள், 25 ஆகஸ்ட், 2008

9.ஐயமிட்டுண்

இல்லை என்று வந்த ஏழை களுக்கு பிச்சை இட்டு தானும் உண்ண வேண்டும் என்பது இதன் பொருள். இல்லாதவர்களுக்கு பிச்சை இடுவது தருமங்களுள் சிறந்தது.

“வறியார்க்கொன்றீவதேயீகை”என்று இதனை பாராட்டி கூறி இருக்கின்றார்கள் முன்னோர். தரும சிந்தனையை வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம் வேண்டும்.

மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர் பிறரால் எளிதாக செய்ய இயலாத அசுவமேதமென்கிற யாகம் ஒன்று செய்தார். பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில் மேன்மை அடைந்த வேதியர்களும்,தவ சிரேஷ்டர்களும், முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.

தருமபுத்திரர், வந்திருந்த அந்தணர் முதலியவர் களுக்கு அளவற்ற செல்வங்களை தானம் செய்து கொண்டு இருந்தார்.அந்த சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு தங்கம் போல பிரகாசிக்க அங்கு வந்து தருமபுத்திரர் முன்னால் வெள்ளமாய் ஓடும் தானசெய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது,அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!

தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து ”கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?இங்கு வந்து ஏன் இப்படி புரளுகிறாய் என்று கேட்டார்.இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

“ஐயா அரசரில் சிறந்தவரே!நான் வசித்துவரும் காட்டில் ஒரு ஏழை முனிவர்(குடும்பத்துடன் தவம் செய்பவர்)வந்து சேர்ந்து குடிசை ஒன்று அமைத்து அதில் தமது மனைவி,மகன், மருமகளோடு வாழ்ந்து வந்தார்.காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவைகளே அவர்களுக்கு உணவு.

ஒரு தடவை மழையே இல்லாமல் இவைகளும் கிடைப்பது அரிதாகி விட்டது.அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை சிறிது சிறிதாகச் சேர்த்து அதனை மாவாக அரைத்து சாப்பிடுவார்கள்.சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.

ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது தானியங்களை சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்போகும் சமயத்தில்,எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி விட்டது,பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது அளிக்கவேண்டும்”என்று மிகவும் கெஞ்சி பிச்சை கேட்டு நின்றார்,கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக் கூட முடியவில்லை.

அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து உபசரித்தார். அது அந்த முதியவருக்கு போதவில்லை அதை அறிந்த மற்ற மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை மனதார வாழ்த்திச் சென்றார்.அவர் அந்த இடத்தை விட்டுச் சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம் ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.

அன்ன ஆகாரமின்றி பல பல இடங்களிலும் அலைந்து திரிந்து பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு நடந்த அதிசயங்களை கண்டேன்.

பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த மாவை உண்ணும்போது அது என் மேலெல்லாம் ஒட்டிக்கொண்டது,அந்த மா ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம் மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!

அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன்.பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்த தருமத்தின் சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே” என்று கூறிய கீரி மேலும்..

”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்,ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள் மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது,ஆதாலால் நீங்கள் செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி பூஜையே மிகவும் சிறந்தது!”

என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச் சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்சென்றது கீரிப்பிள்ளை.

8.ஏற்பதிகழ்ச்சி

பிச்சை எடுத்தல் என்பது அவமானம் தரும் செய்கை என்பதில் சந்தேகம் இல்லை. பிச்சை எடுப்பவன், ஒருவனிடத்தில் பிச்சை கேட்கின்ற நேரத்தில் தன்னுடைய உடல் மனம் யாவும் குன்றிப்போய் விடுகிறான்.பிச்சை எடுத்து பிழைத்தல் என்பது தன் மானத்தை விட்டு வயிறு வளர்க்கும் தொழிலாகிவிடுகிறது.

மகாபலிச்சக்கிரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் பெற்ற திருமாலும்கூட தானம் பெற்றதால் ஏற்பட்ட இழிவினால் தனது திருமேனி குன்றி வாமனரானார் என்று புலவர்களும் கற்பனை செய்திருக்கிறார்கள்.

“பல்லெல்லாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச்
சொல்லெல்லாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி
மல்லெலா மகலவோட்டி மானமென்பதனை வீட்டி
யில்லெலா மிரத்த லந்தோ விழி விழி வெந்த ஞான்றும்”

என்ற செய்யுள் பிச்சை எடுத்து பிழைப்போரின் அவல நிலையை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.