வியாழன், 20 நவம்பர், 2008

12. ஔவியம் பேசேல்

பொறாமையை மேற்கொண்டு பேசாதே என்பது இதன் பொருள்.

ஒருவனிடத்தில் உள்ள கல்வி செல்வம் செல்வாக்கு குணம் முதலியவற்றை கண்டபோது அவன் மேல் பொறாமை கொண்டு அவனை சீரழித்து இழித்து பேசுதல் மிகுந்த தீமையை விளைவிக்கும்.

இச்செய்கையால் இம்மையில் பாவமும் மறுமையில் நரகமும் உண்டாகும் என்பார்கள்.பொறாமைப் பேய் பிடித்தவர்கள் பிறருக்கு தீங்கிழைப்பதோடு தமக்கும் தீமையை உண்டாக்கிக் கொள்வார்கள்.

'ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு'என்று இதன் தீமையை ஔவையார் எடுத்துக் காட்டினார்.

பாண்டுவின் மனைவியாகிய குந்தி ஆண் குழந்தை பெற்ற விபரம் கேள்விப்பட்டு அஸ்தினாபுரத்தின் அரசனான திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி குந்தியின் மேல் பொறாமை கொண்டு தான் பல வருடங்களாக சுமந்திருந்த கர்ப்பத்தை சிதைத்துக்கொண்டாள்.

அப்படி அவள் செய்யாதிருந்திருந்தால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை ஏகசக்ராதிபதியாய் மூன்று உலகங்களிலும் தன்னாண்மை செலுத்தி அரசாட்சி செய்யும் மகாசூரனாயிருந்திருப்பான்.அப்படி இல்லாமல் சிதைந்த கர்ப்பம் வேதவியாசர் அருளால் ஒருவாறு கூடப்பெற்று அதனால் பொறாமைகிருப்பிடமான துரியோதனன் பிறந்தான்.

துரியோதனன் செல்வத்திலும் சௌகர்யத்திலும் மிகுந்து விளங்கும் பாண்டவர் மேல் பொறாமை கொண்டு அவர்களை வஞ்சகமாக அழைத்து மாயச்சூதாடி நாடு நகரம் முதலியவற்றை கவர்ந்து கொண்டதுமன்றி திரௌபதியை நடுச்சபையில் இழுத்து வந்து துகிலுரிந்து மானபங்கமும் செய்தான்.அதனால் துரியோதனன் மகாபாரத யுத்தத்தில் புத்திர மித்திர பந்து வர்க்கங்களோடு மரணமடைந்தது மட்டுமல்லாது நரக வேதனை களையும் அனுபவித்தான் என்று நூல்கள் கூறுகின்றன.

இதனால் பொறாமையால் இம்மை மறுமை இரண்டிலும் கேடு உண்டாகும் என்பது தெளிவாய் விளங்குகிறது.

ஔவியம் பேசேல் என்பதற்கு வீண் பெருமை பேசக்கூடாது என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.

11.ஓதுவதொழியேல்

எக்காலத்தும் அறிவினை வளர்க்கும் நூல்களைப் படிப்பதில் இருந்து விலகாதே என்பது இதன் பொருள்.ஒருவனுக்கு கல்விபோல் உறுதியைத்தருவது வேறொன்றும் இல்லை.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறப்பும் தொடர்ந்து உதவும் என்று பெரியவர்கள் உறுதியாய்க் கூறியிருக்கின்றனர்.தக்க கல்வியால் அறிவு வளர்தல் நிச்சயம்,ஆதலால் ஓதுவது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

இங்கிலாந்து நாட்டில் விக்டோரியா மகாராணியார் அரசுபுரிந்த காலத்தில் ‘கிளாட்ஸ்டன்’என்னும் பிரபு பிரதான மந்திரியாக இருந்தார்.அவர் தனது வீட்டில் பெரிய புத்தகசாலை ஒன்று வைத்து தமக்கு இருக்கும் பலதரப்பட்ட வேலைகளுக்கிடையில் கிடைக்கும் சொற்ப நேரத்திலும் இடைவிடாமல் படித்து வந்தார். என்னேரமாயினும் தினமும் இரவு இரண்டு மூன்று மணி நேரமாகிலும் படித்த பிறகே அவர் உறங்குவது வழக்கம்.அப்படி இடைவிடாமல் படித்து வந்த காரணத்தால் எல்லோரும் புகழும்படி ஒப்புயர்வில்லாத உன்னத நிலையை அடைந்தார்.

திருவள்ளுவரும்,வேதவியாசரும் இன்னும் இவர்களைப்போன்ற பலப்பல அறிஞர்களும்கூட கல்வியின் மேன்மையினால் யாவராலும் எக்காலத்திலும் கொண்டாடப்படும் பெருமை அடைந்து விளங்கினர்.

சிறிது கல்விகற்ற மாத்திரத்தில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவிட்டதாக எண்ணி அகந்தை கொண்டு திரிபவர் அறிவில்லாதவர்களே.அறிவுடையோர் மேலும் மேலும் கற்கும் ஆர்வம் கொண்டு எப்போதும் கற்பதை கை விடமாட்டார்கள்.

“பாடையேறினும் ஏடது கைவிடேல்”என்று இரு பொருள் தரும்படி நமது நாட்டில் வழங்கும் பழமொழி இதன் கருத்தை தெளிவாய்க்காட்டும்.கலைமகளும் இன்னும் கல்வி கற்பதாகக்கூறும் கருத்தும் இது பற்றியேதான்.

ஆதலால் கிடைத்த அவகாசங்களிலெல்லாம் தொடர்ந்து படிக்கவேண்டும்.

செவ்வாய், 4 நவம்பர், 2008

10.ஒப்புரவொழுகு

உலகத்தார் ஒப்புக்கொள்ளும்படியான ஒழுக்கத்தில் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள்.

பலரும் நேர்மை உள்ளதாக எண்ணுவதை இல்லாததாக எண்ணுவதும், பிழை உள்ளதாக நினைப்பதை நேர்மையாக எண்ணுவதும் பெரிதும் அவமானத்திற்கு உள்ளாக்கும்.

மேலும் பெரியோர்களால் நியாயமாக ஆராயப்பட்டு தகுதியானது என்று மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொள்ளாமல் நடப்பது பெரும் தீங்கினையும் விளைவிக்கும்.அப்படி இருப்பதால் இகழ்ச்சி அடைவதோடு இல்லாமல் எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகி சிலவேளைகளில் தீமையையும் அடையவும் நேரிடும்.

இளையான்குடி மாறர் என்ற சிவனடியார் ஒருவர் இருந்தார், அவர் தம் இடத்திற்கு வரும் சிவனடியார்களை பெரிதும் உபசரித்து விருந்தளித்து அவர்களுடைய மகிழ்ச்சி கண்டு தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.தன் செல்வம் முழுதும் இப்படியே செலவழித்ததில் அவர்கள் சீக்கிரமே வறுமை அடைந்தார்கள்.

ஒரு நாள் சிவபெருமான் ஒரு சிவனடியாரைப் போல வேடமணிந்து அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வந்தார்.அப்பொழுது மாறர் தமது வறுமை நிலைமைக்காக வருந்தி நிலத்தில் விதைத்திருந்த முளை நெற்களை வாரி வந்து தமது மனைவியிடம் கொடுத்து உணவு சமைக்கச்சொன்னார்.அவளும் கிடைத்த கீரையையும் நெல் முளைகளையும் பக்குவமாக சமைத்து சிவனடியாருக்கு இட்டாள்.

வந்த சிவனடியார்க்கு தக்கவாறு உபசரிக்கவேண்டிய செல்வம் இல்லையே என்று வருந்தினாள் தங்களுடைய முன் இருந்த நிலையை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகினாள்.

தாங்கள் பிறருக்கு செய்ய வேண்டிய உபசாரங்கள் குறைய நேரிட்டதற்காகவே ஒப்புரவு(உபகாரம்)அறிந்தவர்கள் தங்கள் வறுமை நிலைக்கு மிகவும் வருந்துவார்கள்.