திங்கள், 2 மார்ச், 2009

13.அஃகஞ் சுருக்கேல்

தட்டுப்பாடு நிறைந்த தானியங்களை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்று பணம் சம்மாதிப்பது கூடாது.

ஜெர்மன் நாட்டில் ஹாட்டோ என்ற பாதிரி ஒருவன் இருந்தான்அவன் மிகவும் தீய குணமுடையவன் இரக்கம் சிறிதும் இல்லாத கல்நெஞ்சம் கொண்டவன்.

ஒரு காலத்தில் பஞ்சமுண்டான போது அளவிற்கு அதிகமான தனியங்களை சேகரித்து களஞ்சியங்களில் பதுக்கி வைத்து ஏழைகளுக்கு சிறிதும் கொடுக்காமல் அநியாய விலைக்கு விற்று வந்தான். அதில் பணம் அதிகம் கிடைத்ததில் வெகு சந்தோஷமாக கவலைகள் ஏதுமின்றி வாழ்ந்து வந்தான்.

நாளடைவில் தானியங்கள் இருப்பதை அறிந்து ஏராளமான எலிகள் களஞ்சியத்தினுள் புகுந்து மூட்டைகளை கடித்து குதறி தானியங்களை நாசம் செய்தன,அதை கண்ட ஹாட்டோ தினமும் எலிப்பொறிகளை வைத்து அவைகளை பிடித்து கொன்று வந்தான்.ஆனாலும் எலிகள் அதிகமானதே தவிர குறையவில்லை!.

தான் பதுக்கி வைத்துள்ள தானியங்கள் எல்லாவற்றையும் இந்த எலிகளே தின்று தீர்த்து விட்டால் என்ன செய்வது என்று ஆத்திரமுற்ற ஹாட்டோ அவைகளை ஒரேயடியாக அழிக்க எண்ணி அங்குள்ள ஏழைகளை பலரை கூப்பிட்டு களஞ்சியதினுள் எலிகள் இருக்கின்றதால் தானிய மூட்டைகளை அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் அதற்கு உதவினால் அவர்கள் எல்லோருக்கும் உணவளித்து மேலும் எல்லோருக்கும் தானியங்களும் தருவதாக கூறி அழைத்தான்.

அந்த அப்பாவி ஏழைகளும் அவனின் வார்த்தைகளை நம்பி அவன் சொன்னது போல தானிய மூட்டைகள் யாவற்றையும் அங்கிருந்து எடுத்து வேறோர் இடத்தில் பத்திரப்படுத்தினார்கள்.அவர்கள் அப்படி தானிய மூட்டைகளை நகற்றும் போது அதனுள் இருந்து ஏராளமான எலிகள் தாவி குதித்து அங்கிருந்த சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலுமாக ஓடி ஒளிந்தன.

எல்லா வேலைகளும் முடிந்தவுடன் அன்றிரவு உணவளிப்பதாக கூறி அவர்களை அங்கு வரவழைத்து எலிகளோடு அவர்களும் சாகட்டும் என்று களஞ்சியத்தை பூட்டி நெருப்பு வைத்து விட்டான்.

தானியங்களை நாசப்படுத்திய எலிகளாலும்,அந்த ஏழைகளாலும் இனி எந்த தொந்தரவும் இல்லை நமக்கு தொல்லை விட்டது என்று எண்ணி கவலையேபடாமல் தூங்கப்போனான்.

இது தெரிந்த ஏழை மக்கள் பெரும் கோபத்தோடு கூட்டமாக ஹாட்டோவின் மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள் நுழைந்தார்கள் அது கண்டு ஹாட்டோவும் மிகுந்த கஷ்டப்பட்டு அவர்களிடம் இருந்து தப்பி ஓடினான். அவர்கள் விடாமல் அவனை விரட்டி பிடித்து எல்லோருமாக சேர்ந்து அவன் எழுந்து நடமாட முடியாதபடிக்கு நையப்புடைத்து விட்டார்கள்.

அவன் சேர்த்துவைத்திருந்த தானியங்களும் பறி போய்விட்டது.
ஹாட்டோவும் தன் வினை தன்னைச்சுடும் என்பதற்கு தக்கபடி தண்டிக்கப்பட்டான்.