வியாழன், 20 நவம்பர், 2008

12. ஔவியம் பேசேல்

பொறாமையை மேற்கொண்டு பேசாதே என்பது இதன் பொருள்.

ஒருவனிடத்தில் உள்ள கல்வி செல்வம் செல்வாக்கு குணம் முதலியவற்றை கண்டபோது அவன் மேல் பொறாமை கொண்டு அவனை சீரழித்து இழித்து பேசுதல் மிகுந்த தீமையை விளைவிக்கும்.

இச்செய்கையால் இம்மையில் பாவமும் மறுமையில் நரகமும் உண்டாகும் என்பார்கள்.பொறாமைப் பேய் பிடித்தவர்கள் பிறருக்கு தீங்கிழைப்பதோடு தமக்கும் தீமையை உண்டாக்கிக் கொள்வார்கள்.

'ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு'என்று இதன் தீமையை ஔவையார் எடுத்துக் காட்டினார்.

பாண்டுவின் மனைவியாகிய குந்தி ஆண் குழந்தை பெற்ற விபரம் கேள்விப்பட்டு அஸ்தினாபுரத்தின் அரசனான திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி குந்தியின் மேல் பொறாமை கொண்டு தான் பல வருடங்களாக சுமந்திருந்த கர்ப்பத்தை சிதைத்துக்கொண்டாள்.

அப்படி அவள் செய்யாதிருந்திருந்தால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை ஏகசக்ராதிபதியாய் மூன்று உலகங்களிலும் தன்னாண்மை செலுத்தி அரசாட்சி செய்யும் மகாசூரனாயிருந்திருப்பான்.அப்படி இல்லாமல் சிதைந்த கர்ப்பம் வேதவியாசர் அருளால் ஒருவாறு கூடப்பெற்று அதனால் பொறாமைகிருப்பிடமான துரியோதனன் பிறந்தான்.

துரியோதனன் செல்வத்திலும் சௌகர்யத்திலும் மிகுந்து விளங்கும் பாண்டவர் மேல் பொறாமை கொண்டு அவர்களை வஞ்சகமாக அழைத்து மாயச்சூதாடி நாடு நகரம் முதலியவற்றை கவர்ந்து கொண்டதுமன்றி திரௌபதியை நடுச்சபையில் இழுத்து வந்து துகிலுரிந்து மானபங்கமும் செய்தான்.அதனால் துரியோதனன் மகாபாரத யுத்தத்தில் புத்திர மித்திர பந்து வர்க்கங்களோடு மரணமடைந்தது மட்டுமல்லாது நரக வேதனை களையும் அனுபவித்தான் என்று நூல்கள் கூறுகின்றன.

இதனால் பொறாமையால் இம்மை மறுமை இரண்டிலும் கேடு உண்டாகும் என்பது தெளிவாய் விளங்குகிறது.

ஔவியம் பேசேல் என்பதற்கு வீண் பெருமை பேசக்கூடாது என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.