செவ்வாய், 22 ஜூலை, 2008

4. ஈவது விலக்கேல்

ஒருவர் பொருளோ பணமோ எதுவாக இருந்தாலும் பிறருக்கு கொடுக்கின்ற காலத்தில் அதை நடுவில் நின்று தடுக்காதே என்பது இதன் பொருள்.

ஒருவருக்கு அவர் விரும்பின பொருளை மற்றொருவர் மனமொப்பி கொடுக்கின்ற காலத்தில் வேறொருவர் குறுக்கிட்டுத் த‌டுத்தால் அப்படி செய்தவர் இரண்டு பாவங்களை செய்தவராகிறார்.

தருமம் செய்தவருக்கு வரவேண்டிய புண்ணியத்தை வரவொட்டாமல் தடுப்பது முதல் பாவம்,இரண்டாவது பாவம் ஒருவர் விரும்பின பொருளை அடையப் போகும் காலத்தில் அவருக்கு அது கிடைக்கவிடாமல் தடுத்தது.

இப்படி தடுப்பவர் செய்த பாவம் அவரைச் சேர்வதோடு அவரது சுற்றத்தாருக்கும் அது சேரும்.கொடுப்பதை தடுக்கும் கொடியவரோடு அவரின் உறவுகளும் உண்ண உணவில்லாமல் உடுக்க உடையில்லாமல் தவிப்பார்கள் என்றும்,அந்த பாவத்தால் உண்டாகும் தீமைகள் பற்றியும் அக்காலத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

மகாபலி என்ற சக்ரவர்த்தி சுவர்க்கம்,மத்தியம்,பாதாளம் எனமூன்று உலகங்களை ஆண்டு வந்தான்.இவனால் துரத்தப்பட்ட தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகாபலியால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைச் சொல்லி அவற்றை நீக்க முறையிட்டுக் கொண்டார்கள்.தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி விஷ்ணுவும் ஒரு குட்டை பிரம்மச்சாரியாய் உருவமெடுத்து வாமனன் என்ற பெயருடன் சக்ரவர்த்தி மகாபலியிடம் வந்து தாம் அமர்ந்து ஜபம்செய்ய தமது காலடியால் மூன்றடி மண் யாசகம் கேட்டார்.

அப்பொழுது மகாபலியின் குருவாகிய சுக்கிராச்சாரியார் சக்ரவர்த்தியிடம்"அரசே உங்களிடம் யாசிக்கின்ற இவரை சாமன்யராக நினையாதீர் கெட்டவர்களை க‌ண்டித்து நல்லவர்களைக் காக்கும் கடவுளே உங்களை ஏமாற்ற வந்திருக்கிறார் அவர் கேட்டபடி தானம் செய்யாதீர்கள்"என்று தடுத்தார்.மகாபலியோ"எனக்கு எப்படிப்பட்ட தீங்கு நேரிட்டாலும் அவர் கேட்டதைத் தருவேன்"என்ற மன உறுதியோடு வாமனர் கேட்டபடி மூவடி மண் தானம் செய்ய தீர்மானித்தான்.

அப்பொழுது வாமனரும் தன் கையில் இருந்த கெண்டியை மகாபலி கையில் கொடுத்து தமக்கு மூவடி மண் தானம் செய்ய வேண்டினார்.மகாபலியும் கெண்டியில் உள்ள‌ நீரை வாமனர் கையில் வார்த்து தானம் செய்ய தொடங்குகையில் சுக்கிராச்சாரியார் மிகச்சிறிய உருவெடுத்து கெண்டியின் மூக்கில் நுழைந்து நீரை வரவிடாமல் தடுத்தார்,இதையறிந்த வாமனர் தன்னிடமுள்ள‌ தருப்பை ஒன்றால் கெண்டியின் மூக்கினுள் குத்தி மகாபலி செய்யும் தானத்தை தடுத்ததால் அவர் உணவும் உடையும் இன்றி கஷ்டப்படவேண்டும் என்று சாபமும் கொடுத்தார்.இதனால் கண்ணில் காயமடைந்து மிகுந்த வருத்தத்துடன் சுக்கிராச்சாரியார் விலகி நிற்க மகாபலியும் வாமனருக்கு மூன்றடி மண் தானம் செய்தார்.

அதுபோது வாமனர் திரிவிக்கிரமராய் பெரிய உருவெடுத்து ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் மற்றோரடியால் மாகாபலியை பாதாளத்தில் அழுத்திவிட்டார்.
தானம் கொடுப்பதை தடுத்த சுக்கிராச்சாரியார் கண்ணிழந்த நிலையில் உணவும் உடையும் இன்றி வருந்தி கஷ்டப்பட்டார்.

கருத்துகள் இல்லை: